குறும்பர் இனத்தை சேர்ந்த யூகிமுனி

குறும்பர் இனத்தை சேர்ந்த யூகிமுனி
அறியும் முன்
ஓர் எளிய அறிமுகம்.

சித்த மருத்துவத்தில் வல்லவர் தேரையர்.

தேரையரின் 
குரு அகத்தியர்.

மருத்துவத் துறையில் அகத்தியரையே
விஞ்சியவர் தேரையர்.



தேரையரின் 
மனதுக்கினிய 
சீடரே யூகிமுனி.

மருத்துவத்தில் 
மகத்துவம் நிறைந்தவர் என்பதாலேயே 
தேரையருக்கு 
யூகியை 
நிரம்பப் பிடிக்கும்.

யூகிமுனியின் 
ஆய்வுகள் 
ஆவணங்கள் சித்தமருத்துவத்தின் பொக்கிஷங்கள்.

யூகிமுனி அருளிய 
'வீர சுண்ணம்'
என்ற 
மருத்துவ நூல்
ஒப்புயர்வற்றது.

யூகியை
மெச்சும் தேரையர் 
ஒரு முறை விரும்பி 
தனது குரு அகத்தியரிடம் 
சீடர் யூகியை 
அறிமுகம் செய்தார்.

அகத்தியர் பெருமானும் 
யூகி முனிவரும் 
மருத்துவ உலகை 
அலசி மகிழ்ந்தனர்.

 'வீர சுண்ணம்'
 நூலை 
அகத்தியரிடம் 
வழங்கினார் 
யூகிமுனி 
தேரையர் 
முன்னிலையில்.

சுண்ணம் பற்றி
ஆவலாய் கேட்டார் 
அகத்தியர் பெருமான்.

சுற்றுமுற்றும் பார்த்தபடி தவவலிமையால் 
ஆங்கொரு காகத்தை வரவழைத்தார் யூகி.

அக்காகத்தை 
அருகில் அழைத்தார்.
தாவித் தாவி 
காகம் வந்தது.

அதனிடம் 
சுண்ணத்தை தந்தார் 
யூகிமுனி .

'என்னாகும்'
என அகத்தியர் யோசித்துக்கொண்டிருந்த கணத்தில் 
சுண்ணத்தை 
உண்ட கரு வண்ண
காகம் 
வெள்ளை 
நிறக் காக்கையாகி பிரமிப்பூட்டியது.

அகத்தியரே 
ஆச்சரியப்பட்ட 
அற்புதம் அது.

தனது சீடனின் 
சீடனை 
ஆரத் தழுவி 
ஆசீர்வதித்தார் 
அகத்தியர் பெருமான்.



இடையிலிருந்த 
தேரையர் 
மிக மகிழ்ந்து 
அகம் நிறைந்தார்.

" அப்பா...
 உன் திறமை 
வியக்க வைப்பது. மெச்சத்தக்கது.

உனக்கு 
'யூகி'
என்ற பட்டத்தை 
அளிக்கிறேன்.

இனி நீ யோகி 
மட்டுமல்ல... யூகி

யூகி முனி "

அகத்தியர்
திருவாயால் 
யூகி முனி பட்டம்.

அதுவே அவர் 
பெயராய் 
நிலைத்துப் போனது.

யூகிமுனிக்கு
செந்தூரம் 
தயாரிப்பது குறித்து போதித்தார் அகத்தியர்.

அது அவருக்கு 
கிடைத்த 
ஞான வாய்ப்பு.

மருத்துவ சிகாமணியாய் மருத்துவ மாமணியாய் யூகி முனியாய் 
எண்ணற்ற நூல்களை அருளினார்.

பன்னிரு காண்டம்
வைத்திய சிந்தாமணி
தத்துவ ஞானம் 
வகாரம்
கற்பம் 
போன்ற 
அவரது படைப்புகள் எளிமையானவை.

சித்தர் பாடல்களின் மறைபொருட்களை 
திரை விலக்கி 
வெளிப்படுத்தி 
அக்காலம் வரை 
இருந்து வந்த 
மூட விதிகளை 
முடமாக்கித் 
தெளிவாக்கினார்.

தவறான புரிதல்களை சாட்டை எடுத்து 
அடித்து நொறுக்கினார்.

தப்பானவர்களை 
விரட்டித் துரத்தினார்.

வைத்திய முறைகளை எளிமையாய் சொன்னதால் சித்த வைத்தியர்களுக்கு யூகிமுனி 
மானசீக குருவானார்.



அமுரி 
பிண்டம் 
சாகாக்கலை 
வேகாக்கால் 
போகாப்புனல் 
போன்ற சொற்களுக்கு அதுவரை கொண்டிருந்த அர்த்தங்களை 
அனர்த்தங்கள் 
என்று சொல்லி 
சவுக்கடி வார்த்தைகளால் கண்டித்துவிட்டு 
உண்மைப் பொருளை தெள்ளத் தெளிவாகியது யோகியின் மகத்துவம்.

'அமுரி என்பது 
மூத்திரமல்ல.. 
சமுத்திர நீரே !

'ச 'வை  எடுத்துவிட்டு 
மூத்திரம் ஆகிவிட்டனர்.

அவர்களைக்
கட்டி வைத்து 
உதைக்க வேண்டும் '
என சவுக்கைத்
தூக்கினார் யூகிமுனி.

'வழலை ' என்பதை 
பிணம் என்றே 
சிலர் சொல்லி விட்டனர்.

பிண்டம் என்பதை 
'இறந்த சிசு' என்று 
புரிதல் செய்து
பணம் பண்ணும் பாவிகள் மனம் இழந்து 
மதி இழந்து 
இறந்த சிசு தேடி 
பாவம் செய்தார்கள்.

உண்மையில் 
பிண்டம் என்பது 
'இரும்பு' எனப் 
போட்டு உடைத்தார். 

மறை பொருள் யாவும் 
இவர் திருவாயில் 
திரை நீக்கிய
உரைபொருள் ஆயின.

பூடகங்கள் இவரிடம் 
அறவே இல்லை.



ரசவாதம் பற்றி 
யூகிமுனி அளவிற்கு 
எளிமையாய்ச் 
சொன்ன சித்தர்
எவரும் இல்லை 
என்பது பேருண்மை.

தேன் சுரக்கும் 
யூகிமுனியின் 
கவிதைகளில் 
சித்தர் பரம்பரை பற்றிய 
அவர் பாடல்கள் 
தெள்ளிய நீரோடை போல் ஓயாமல் பாயும்.

கைலாயப் 
பரம்பரை பற்றிய 
அவர் பாடலின் 
விளக்கம் வித்தியாசமானது.

'சிவன் உமைக்குச் சொன்னதை 
உமை நந்திக்குச் 
சொன்னார்.

அது 
அசுவினி 
விசுவின் 
தன்வந்திரி 
அகத்தியர் 
புலத்தியர்
தேரையர் 
என அடுத்தடுத்து தொடர்ந்தது.'

இது யூகிமுனி 
சொன்னது.

'அஸ்வினியின் சீடர் காலாங்கிநாதர்.

அவரிலிருந்து
போகர் 
புலிப்பாணி
கொங்கணர்
சட்டைமுனி 
கருவூரார் 
பாம்பாட்டி என்று 
இன்னொரு 
இணை வழி 
சித்தர் பாரம்பரியம் 
உண்டு.'

680 ஆண்டுகள் 
வயது கொண்டு
2 தலைமுறைகளைக் கொண்டவர்.
கண்டவர். 

குறும்பர் ஜாதி 
என்பதும் 
சிங்கள குலத்தில் 
பிறந்த கன்னித்தாய் பெற்றெடுத்த பிள்ளை என்பதும் 
உலவும் தகவல்கள்.

தமிழின் 
ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று பெருங்கதை.

அக்கதை நாயகன் 
வத்சல மன்னனாகிய உதயணனின் முதலமைச்சராக 
இருந்தவர் யூகி.

அவரே 
பின்னாளில் 
துறவறம் பூண்டு உபதேசங்கள் பெற்று யூகிமுனி ஆனதாக 
ஒரு வரலாற்று யூகம். 

போகர் பெருமான் 
யூகியின் பிறப்பைச்
சொல்வது 
ஆடுமேய்க்கும் 
குறும்பர் என்றே.

யூகிமுனி நீண்டகாலம் இல்லறம் கண்டவர்.

இருப்பினும் 
துறவறம் பூண்டு சிறந்தவர்.

துறவறம் பூண்டு 
சமாதிக்கு இடம் தேடிய யூகிமுனி மலைகளுக்கிடையே புகுந்தார்.

அங்கே ஒரு 
வித்தியாசமான 
குத்துக்கல்.

அக்கல் மேலமர்ந்து தியானிக்கையில் 
மலையே அதிரும் 
மாபெரும் ஒலி.

ஒலியைத் 
தொடர்ந்து 
ஆயிரம் கோடி 
சூரிய ஒளியாய்
ஒரு முனிவர் 
அங்கு தோன்றினார்.

அவர் 
சம்பார முனிவர்.

அவரே யூகியை 
யோகம் நிறைந்த 
சித்தராய் மாற்றினார். உபதேசங்கள் அருளினார்.

சமதாக்கினி முனிவரும் திரணாக்கிய முனிவரும் யூகிமுனியின் சீடர்கள்.

எட்டு.
இரண்டு.

எட்டையும் இரண்டையும் எளிதாய் விரிவாய் விளக்குவார் யூகிமுனி.

அவரளவுக்கு 
எவருக்கும் 
புரிகிற மாதிரி 
உரைத்தவர் 
உலகினில் சிலரே.

இதற்குள் இருக்கும் ரகசியத்தை
யூகிமுனி
வெளிப்படுத்திய 
பாங்கைப் பாருங்கள்.

முதல் ரகசியம்.

எட்டு என்பது ரவி.
இரண்டு என்பது மதி.

செம்புக்கு ரவி என்றும் வெள்ளிக்கு மதி 
என்றும் பெயருண்டு.

இரண்டும் சேர்வதே 
வாதம்... 
ரசவாதம்.

எப்படி என்பதும் 
எவ்வளவு என்பதும் ரகசியத்திற்குள்
ஒளிந்திருக்கும் ரகசியம்.

செம்புடன் கந்தகம் 
உருக்கின் செம்பு சாகும்.

அத்துடன் அயத்தைக் கலப்பின் 
செம்பொன் கிடைக்கும்.

அதோடு 
எட்டுக்கு இரண்டு 
வெள்ளி சேர்த்தால் 
ஏழு மாற்று தங்கம் கிடைக்குமாம்.

'ரசவாதம் செய்பவர்கள் சிவனுக்கு ஒப்பாவர்.'

இது யூகி சொன்ன 
முதல் விளக்கம்.

எட்டான ரவி என்பது 
இடகலை 
இரண்டான மதி என்பது பிங்கலை.

இடகலையும் பிங்கலையும் சுழிமுனையில் சேர்ந்தால் யோகம்.

அடுத்த ரகசியம் வாசி.

வாசி 
நீ வாசிக்க வாசிக்க வாசியோகம் கைவரும். 
இந்த
மூன்றாவது ரகசியம்.
முக்கியமானது. 

எட்டே நாதம்.
இரண்டு என்பது விந்து.

பெண்ணின் நாதமும் ஆணின் விந்தும் 
சேர்ந்தால் உயிர்.

உலகம் முழுதுக்கும் 
இதுவே விதி.

உலகுக்கே 
இதுதான் விதி.

புல்
பூண்டு
பூச்சி 
புழுக்கள் 
மனிதர் 
உள்ளிட்ட 
அனைத்து உயிர்களுக்கும் இதுவே நியதி.

நாத விந்துக்கள் 
சேர்க்கையே 
உயிராய் காணப்பெறும் உயிர்கள் அனைத்தும்.

இது யூகி 
வெளிப்படுத்திய 
உயிர்த் தத்துவம்.

அடுத்த ரகசியம் 
ஆன்மீக ரகசியம்.

தமிழில் அகர எழுத்து
'அ '
எட்டைக் குறிக்கும். 

உகர எழுத்து 
'உ'
இரண்டைக் குறிக்கும்.



அகரமும் உகரமும் சேர்ந்து மகரத்தில்
முற்றுப்பெறும் போது ஒலிப்பதே 
'ஓம்' என்ற பிரணவம்.

அதுவே 
ஜோதியாய் 
ஒளி வெள்ளமாய் 
அண்ட சராசரங்களில் 
உள்ள 
அனைத்தையும் தழுவி 
அகில உலகிலும் 
வியாபித்து 
ஓங்கார நாதமாய் 
சக்தி சொரூபமாய் 
சிவ சொரூபமாக 
விளங்கும்.

எட்டுக்கும் இரண்டுக்கும் உள்ள இன்னும் 
எத்தனை ரகசியங்களோ, யூகிமுனியே அறிவார்.

திருவண்ணாமலையே 
திவ்ய சரித்திரம் படைத்த யூகிமுனியின் சமாதித் தலம். லயமான திருத்தலம்.

யூகிமுனி சித்தரை
திருவண்ணாமலை 
சென்று வணங்குவோருக்கு ஞானமார்க்கம் சித்திக்கும்.
 


Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!