குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவையாட்டம்
#குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவையாட்டம்
____________________________________
____________________________________
குறும்பர் பழங்குடி மக்களின் முக்கியக் கலை சேவையாட்டம் ஆகும் .
சேவையாட்டம் என்பது 6 பேர் / 8 பேர் / 10 பேர் கொண்ட குழுவாக இணைந்து ஆடும் ஆட்டமாகும் .
தப்பட்டை (மகுடம்), புல்லாங்குழல் முதலிய வாத்தியங்களினால் இசைக்கப்பட்டு ஆடப்படும் ஆட்டமாகும் . கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகக் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்த ஓர் இன மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கலை வடிவம்.
கைகளில் உண்மையான 2 அடி வாளுடன் ஆடப்படும் பாரம்பரியமான கலையாகும் . பல கலைகளுக்கு அரசர்களின் ஆதரவும் அவர்களுக்குப் பின்னர் செல்வந்தர்களின் ஆதரவும் இருந்து வளர்த்து எடுத்திருக்கின்றனர் . ஆனால் ஒரு
பழங்குடியின மக்களின் கலை
காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு இன்றும் அதைப் பாதுக்காத்து வருகின்றவர் சாதாரணக் கால்நடைகளை வளர்க்கும்
பழங்குடியின மக்கள் தங்களின் கலை பண்பாடு பழக்க வழக்கங்களைத் தங்களின் உயிரினும் மேலாகக் கருதிப் போற்றிப் பாதுக்காத்து வந்திருக்கின்றனர் .
தங்களது தொல்பெரும் கலையைச்
சிற்பங்கள் மூலம் கோயிலில் , வடித்து வைத்து அதனை வணங்கிப் பாதுகாத்திருக்கின்றனர் . இசைக்கருவிகள் முழங்க , சேவையாட்டம் ஆடுபவர்களின் சிற்பங்கள் தற்பொழுதும் காணக்கிடக்கின்றன .
இச்சேவையாட்டம் என்பது திருவிழாக்காலங்களில் இறைவன் முன்பு ஆடப்படுவது . இவ்வாட்டத்திற்கான இசைக்கருவிகளும் திருவிழாக்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன . மற்ற காலங்களில் அவை வாசிக்கப்படுவது இல்லை . எனவே சேவையாட்டமும் அதற்கான இசைக்கருவிகளும் தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன .
சேவையாட்டத்திற்கு முக்கியமான இசைக்கருவி(மகுடம்)
தப்பட்டை ஆகும் . இது வட்ட வடிவில் உள்ள தோல்கருவி இதை குறும்பர் பழங்குடிமக்களே தயாரிக்கின்றனர் .
தப்பட்டையின் சட்டத்தை மூன்று பால் மரங்களை இணைத்து வட்டவடிவில் தயார் செய்கின்றனர் . இத்தப்பட்டையின் மேற்புறம் ஆட்டின் தோலால் கட்டப்பட்டிருக்கிறது .
இந்தத் தப்பட்டையைச் செய்யும் தப்பட்டைக்காரர் விரதம்
இருந்து தன் முன்னோர்களை வேண்டி இந்தத் தப்பட்டையைச் செய்வார் . கோயில் பூசைகளிலும் விழாக்களிலும் மட்டுமே இத்தப்பட்டையை வாசிக்கின்ற காரணத்தால் இத்தப்பட்டை மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது . முதலில் தப்பட்டைக்குப் பூசை செய்து வழிபாடு செய்த பின்னரே அதனை எடுத்து வாசிக்கின்றனர் . குறும்பர் பழங்குடி மக்களின் விழாக்களில் தப்பட்டைக்குப் பூசை செய்வது என்பது முக்கியமான சடங்காகும் . தப்பட்டையை அடிப்பவர்கள் தப்பட்டைகாரர்கள் என்று குறும்பர் பழங்குடி மக்கள் அழைப்பார்கள் . தப்பட்டைக்காரர்கள் இவர்கள் தான் தப்பட்டை என்னும் இசைக்கருவியைத் தயாரிக்க வேண்டும் . விரதம் இருந்து தயாரிக்க வேண்டும் . தப்பட்டைக்குத் தேவையான மரம் வெட்டுவதிலும் சில விதிமுறைகள் உண்டு . தேவலேரி மரம் , பூவரசு மரம் , வேங்கை மரம் ஆகிய மூன்று மரங்களும் புற்றின் மேல் வளர்ந்து இருக்க வேண்டும் . மூன்று பௌர்ணமி , மூன்று அமாவாசைகள் , மரத்திற்கு தப்பட்டைக்காரர்கள் பூசை செய்ய வேண்டும் . பின்பு மரத்தை வெட்டிப் பதப்படுத்தி மூன்று துண்டுகளாகச் செய்து மூன்றையும் சேர்த்து அலிக , திம்மை போன்றவைகளாகச் செய்கின்றனர் . பின்பு தப்பட்டையை நந்தியானுடையக் கோமயத்தில் நனைத்து மஞ்சள் தடவி வீரபத்திரர் கோயிலில் வைத்துப் பூசை செய்து பின் எடுத்து அடிப்பார்கள் . இதை அடிக்கும் பொழுது வெறும் கைகளால் தான் அடிக்க வேண்டும் . அருள்மிகு வீரபத்திரருக்குப் பூசை செய்யும் பொழுது தப்பட்டைக்கும் தப்பட்டைக்காரர்களுக்கும் பூசை செய்ய வேண்டும் . அருள்மிகு வீரபத்திரருக்கு சேவை செய்வதும் , தொண்டு செய்வதும் இவர்களுடைய குலத்தொழில் ஆகும் . ஆகவே கோயில்களில் பூசை செய்யும் பொழுது குறும்பர் சமுதாய மக்கள் தப்பட்டைக்காரர்களை முதன்மையாக வைத்து இன்றும் மரியாதை செய்யும் வழக்கம் செய்கின்றார்கள் .
சேவையாட்டம் ஆடுபவர்கள் அனைவரும் ஒரே
மாதிரியான உடை அணிவர் . வெள்ளை வேட்டி அணிந்து
கால்களில் சலங்கை கட்டி கையில் 3 அடி வாள் , கேடயம் , துண்டு ஆகியவற்றை வைத்துக் கொண்டு , தலையில் தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு தோற்றம் அளிப்பர் .
சேவையாட்டம் ஓர் இரவு முழுவதும் ஆடும் ஆட்டமாகும் . ஓர் இரவு முழுவதும் கண்விழித்து ஆண்கள் இவ்வாட்டத்தினை ஆட பெண்கள் இவ்வாட்டத்திற்கான பாடல்களை இரவு முழுவதும் பாடுவர் . இவ்வாட்டத்தினைக் கற்றுக்கொள்ளத் தொடர்ந்து 60 நாட்கள் ஆகும் என்பர் . தினமும் 3 முதல் 4 மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும் . பயிற்சி முறையாக முடிவடைந்த பிறகு அரங்கேற்றம் நடைபெறும் . அதன்பின்னரே உற்சவ மூர்த்தியின் முன்பு ஆடமுடியும் . இவ்விதிமுறைகள் இன்றும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடைப்பிடிக்கப்படுகின்றன .
நடனத்தின்பொழுது நடனமாடுபவர்கள் உற்சவரையும் , தப்பட்டை அடிப்பவர்களையும் வணங்கிய பிறகு இசைக்கேற்ப ஆடுவர் . இந்த நடனம் ஆடும்பொழுது ஆடுபவர்களின் கால்களும் முழுமையாக இயங்குவதால் உடலுக்கு நல்ல வலிமையும் , நரம்புகளுக்குச் சக்தியும் , கைகளும் , புத்துணர்ச்சியும் கிடைக்கின்றன .
இச்சேவையாட்டத்தில் 12 ஆதிகள் உள்ளன . அவை பின்வருமாறு
1. பூஜைகத்தி
2. குனாகத்தி
3. கரக்கத்தி
4. நட்டுவதகத்தி
5. சிந்தகத்தி
6. நிவலுகத்தி
7. சாதனகத்தி
8. மயிலுகத்தி
9. உலிவாசம்
10. தும்பராகத்தி
11. நடாகத்தி
12. பேட்டிகத்தி
Comments
Post a Comment