புறநானூறு கூறும் குறும்பர்(kurumbar)


புறநானூறு கூறும் குறும்பர்(kurumbar)
தன் கணவன் போருக்குச் சென்றால் அவன் திரும்பி வரும்வரை மனைவி தன் தலையில் பூச்சூடாமல் இருப்பது மரபு என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது. -புறம், 293‏‎ஆசிரியர் பக்கம்‎‏‏14
புறநானூறு, 293. (பூவிலைப் பெண்டு!)
பாடியவர்: நொச்சிநியமங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: காஞ்சி.
துறை: பூக்கோள் காஞ்சி.
===========================================
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேர்எழில் இழந்து வினைஎனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே பூவிலைப் பெண்டே!
அருஞ்சொற்பொருள்:-
நிறப்படை = குத்துக்கோல் (அங்குசம்)
ஒல்கா = தளராத
குறும்பு = அரண்
குறும்பர் = அரணுக்குப் புறத்தே நின்று போர் செய்பவர்
ஏவல் = கட்டளை
தண்ணுமை = ஒருவகைப் பறை
இரங்கல் = ஒலித்தல்
எழில் = தோற்றப் பொலிவு
வினை = போர்
அளியள் = இரங்கத் தக்கவள்
இதன் பொருள்:-
குத்துக்கோலுக்கும் அடங்காத யானையின் மேலே இருந்து தண்ணுமை என்னும் பறையை அறைவோன், அரணுக்கு வெளியே இருந்து போர் செய்யும் பகைவரை எதிர்த்துப் போரிடுவதற்கு வருமாறு, போருக்கு அஞ்சி நாணி இருக்கும் ஆண்களுக்கு கட்டளையிடும் பறையின் முழக்கம் கேட்கிறது. ஆகவே, இங்குள்ள ஆண்கள் அனைவரும் போருக்குப் போகப்போகிறார்கள். இனி இங்குள்ள என்னைப் போன்ற மறக்குலப் பெண்கள் பூச் சூட மாட்டார்கள். இந்தப் பூ விற்கும் பெண், எங்களைவிட அதிகமாகத் தோற்றப் பொலிவிழந்து காணப்படுகிறாள். அவள் பூவை விற்பதற்கு, போருக்குப் போகாதவர்கள் இருக்கும் வீடுகளுக்குப் போவாள் போலும்; அவள் இரங்கத் தக்கவள்.
பாடலின் பின்னணி:-
ஓரூரில் இருந்த அரசனின் அரண்களைப் பகை அரசன் ஒருவன் முற்றுகையிட்டான். அதனால் போர் தொடங்கியது. வீரர்கள் அனைவரையும் போருக்கு வருமாறு பறை சாற்றப்படுகிறது. வீரர்கள் பலரும் ஏற்கனவே போருக்குச் சென்றுவிட்டார்கள். போருக்கு அஞ்சி இன்னும் தங்கள் வீடுகளிலேயே இருக்கும் ஆண்கள் வெட்கப்படும்படி அந்தப் பறை ஒலிக்கிறது. வீரர்கள் போருக்குச் சென்றால், அவர்களின் மனைவியர் அவர்களைப் பிரிந்திருக்கும் நாட்களில் தங்கள் தலையில் பூ அணியாமல் இருப்பது மரபு. போருக்குச் சென்ற வீரர்களின் வீடுகள் உள்ள இடத்தில் பெண் ஒருத்தி பூ விற்க வந்தாள். அங்குள்ள மறக்குலப் பெண் ஒருத்தி, ”இங்கு யாரும் பூச் சூட மாட்டர்களே. இவளிடத்தில் பூ வாங்குவார் எவரும் இல்லையே; இவள் நிலைமை மிகவும் இரங்கத்தக்கது.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
சிறப்புக் குறிப்பு:-
தன் கணவன் போருக்குச் சென்றால் அவன் திரும்பி வரும்வரை மனைவி தன் தலையில் பூச்சூடாமல் இருப்பது மரபு என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.
பார்ப்பனர், நோய்வாய்ப்பட்டோர், ஆண்பிள்ளைகள் இல்லாதோர் ஆகிய ஒரு சில ஆண்கள் மட்டுமே போருக்குச் செல்லமாட்டார்கள். ஆனால், அத்தகையவர் வெகு சிலரே. ஆகவே, பூ விற்கும் பெண் அத்தகையவர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றுதான் பூ விற்க வேண்டும். அதனால்தான், அவள் மிகவும் இரங்கத் தக்கவள் என்று மறக்குலப் பெண் கருதுவதாகப் புலவர் குறிப்பிடுகிறார்.



நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.

இப்போது என்ன நடந்தது?   மறவர்களை நோக்கி ஓர் இனமானம் காக்கும்
ஏவலன்றோ வீசப்பட்டது?  பகை அழிக்கப் போருக்குப் புறப்படு என்ற ஆணையன்றோ அந்தத் தண்ணுமையால் எறியப்பட்டது? இது நன்கு வெளிப்படும்படியாக: 'குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை" என்று புலவர் இனிமை தோன்றத் தெளிவிக்கிறார்.  ஆகவே இதிலேதும் இரங்கலுக்கு இடமில்லை என்பது முன்வரு குறிப்பாயிற்று.  குறும்பர் -  மறவர் . குறு  என்ற இக் குறுமைச் சொல்  அடித்தளப் போர்மறவரைக் குறிக்கும் பொருள்பொதிந்த சொற் பயன்பாடு.  அவர்களே நாடு காவலர்கள் .
இந்தத் தண்ணுமைத் தட்டொலி இரக்கத்தையா வரவழைக்கிறது?  யாருக்கு
அந்த இரக்கம் வேண்டும்? போருக்கு அஞ்சியவர்களாய் வாழ்ந்து சாகும்
நாணுடை மாக்கட்கு அது வேண்டும்!  மக்கட்கு அன்று,  அந்த மாக்கட்கு!
அவர்கட்கு வேண்டுமானால் இது இரங்குதலைத் தரும்.  எமக்கன்று, யாம்
மறக்குலத்து மாது என்பது தோன்ற: " நாணுடை மக்கட்கு இரங்கும்" என்றார் புலவர்.
எப்போதும் பூச்சூடிக் கொள்பவள். இன்று அது சூடவில்லை. தன் அழகில்
கொஞ்சத்தை அவள் இழந்துவிட்டவள்தான்.அழகிய மலர்கள் சூடி மணச்சாந்துகள் இட்டுக் கணவன்முன் நின்றால் அழகு அழகுதான். ஆனாலும் என்ன? போருக்குப் புறப்பட்ட கணவனைக் கண்டு உள்ளம் பூரித்து அது முகத்திலும் கண்களிலும் வெளிப்பட்ட அந்த அழகு அந்த இழப்புக்கு ஈடு செய்யவில்லையோ?  "அதனால் யாம் இழந்தது சிறிதே. எம்மினும் மிகுதியாய் தன் பேரெழில் இழந்து, என்ன வினை ஆகிவிட்டது என்று நொந்துகொண்டு இன்னொரு வீட்டுக்குள் புகுந்து பூவிலை கூற முனைகிறாளே,,, அவள் இழந்தது அதிகம்; அதிகம். இன்று பிழைப்பே அவளுக்குக் கேள்விக்குறி ஆகிவிட்டதே! வினை ஆகிவிட்டதே. பாவம் பாவம் அவள்தான் பாவம் என்கிறாள் இம்மறவர் மாது. யான் இரும்பு வருக்கத்துப் பெண் என்கிறாள் இவள்.
 ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.
என்பதைப் பாடி இன்புறுக.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!